நவராத்திரியின் முதல் மூன்று கிழமைகளில் மலைமகளின் அம்சமான துர்கையை வழிபாடு செய்தோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது.
நவராத்திரியின் 4ம் நாள் பூஜை முறை, நேரம், கடன் தீர மகாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு தந்தருள்வாள். நவராத்திரியின் 4ம் தினத்தன்று பெண் குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் இல்லத்துக்கு வரவழைத்து, ரோகிணி என்ற திருப்பெயருடன் வழிபடுதல் வேண்டும். ரோகிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள்.
4வது நாளில் பெண்குழந்தைகளை ரோகிணியாக வழிபட்டால், நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெற முடியும்..
4ம் தினத்தன்று காலையில் முழு அரிசியைக் கொண்டு படிக்கட்டுக் கோலம் போடுதல் வேண்டும். பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், சக்தி வாய்ந்த மந்திரம் மற்றும் லட்சுமி வழிபாட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியை வழிபாடு செய்ய வேண்டும்.
மாலையில் வைஷ்ணவி தேவிக்கு நைவேத்தியம் கதம்ப சாதம், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்கவேண்டும்.
மகாலட்சுமியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்".
இந்த மந்திரம் மகாலட்சுமியின் அருள், செல்வம் மற்றும் செழிப்பை வேண்டி உச்சரிக்கப்படுகிறது.
சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மியே நமஹ"
மகாலட்சுமி பீஜ மந்திரம்
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்
மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா".
நவராத்திரியின் 4ம் தினத்தன்று லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலான மந்திரங்களை பாராயணம் செய்வதும், அன்னை மகாலட்சுமியின் 108 திருநாமங்களை உச்சரித்து அர்ச்சனை செய்வதும் மிகவும் சிறப்புக்குரிய பலனைத்தரும். மேலும் அன்றைய தினம் நீங்கள் உடுத்தும் உடை மற்றும் அன்னை மகாலட்சுமியின் உடை கருநீல நிறத்தில் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாக
சொல்லப் படுகிறது.
பலன்கள்;
பொதுவாக நவராத்திரி பூஜை வழிபாட்டை மேற்கொண்டாலே வாழ்வில் சகல சம்பத்தும் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது . குறிப்பாக நவராத்திரியின் 4ம் தினத்தன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதால் கடன் பிரச்சனை தீரும். பண நெருக்கடி விலகி இல்லத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மேலும் அன்றைய நாளில் அன்னதானம் செய்வது கூடுதல் பலன்களை பெற்றுத் தரும்.
இந்த நவராத்திரி காலத்தில் உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வைத்து அம்பிகையை மனம் உருகி வேண்டினாலே அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைத்துவிடும்.
Comments
Post a Comment