பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை
பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...
புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும்.
ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வதும் அதை விட சிறப்புக்குரியதாகும். ஆகவே புரட்டாசி 2ம் சனிக்கிழமைகளில் திருப்பதி பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் உண்டு. அந்த வகையில் தளிகை இடும் வழக்கம் உள்ளவர்கள் என்ன நைவேத்தியம் நிவேதனம் வைத்து, எந்த நேரத்தில் தளிகை இட்டு, எவ்வாறு வழிபாடு செய்தால் பெருமாளின் அருளும், அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைத்து, இல்லத்தில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
பஞ்சமியும், புரட்டாசி சனிக்கிழமையும் இணைந்து வரும்போது
இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.பஞ்சம திதியும் புரட்டாசி மாத சனிக்கிழமையும் இணைந்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தெய்வீகமானதாகவும் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க தினத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது, சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களைப் போக்கி, மும்மடங்கு பலனைத்தரும். மேலும், இந்த தினத்தில் விரதம் மேற்கொள்வது ஆன்மீக வளர்ச்சிக்கு வித்திடும். இந்த நாளை தவற விடாமல் பெருமாளை வழிபாடுவதன் மூலம் நம்முடைய தீய வினைகள் நீங்கும். எனவே இன்றைய தினம் நாம் தவறாமல் பெருமாள் ஆலயம் சென்று அவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சம திதியும், புரட்டாசி மாத சனிக்கிழமையும் சேரும்போது, பெருமாளின் அருளைப் பெறவும், சனி தோஷங்களைப் போக்கவும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
வழிபடும் முறை....
அன்றைய தினம் முழுவிரதம் இருப்பது மிகுந்த நன்மை அளிக்கும். முதலில் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் இறைவனுக்கு முன்பு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பெருமாள் படம் இருந்தால் அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர்களை சாற்ற வேண்டும். அதிலயும் துளசி மாலை சாற்றுவது மிகவும் சிறப்பானது. காலை அல்லது மாலை இல்லத்தின் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். மேலும் கோவில் கொடி மரத்திற்கு நமஸ்காரம் செய்த பிறகு தான் கருடாழ்வாரை வணங்க வேண்டும். அதன் பின்னர் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு பெருமாளுக்கு துளசி மாலையும், தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களையும் வாங்கித் தர வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் அன்னை மகாலட்சுமி மஞ்சள் வாங்கி தருவது என்பது நம்முடைய வாழ்வில் பல நன்மைகளை அளிக்கவல்லது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும். அவரை பதினோரு முறை சுற்றி வலம் வருதல் சிறப்பான பலனை பெற்றுத்தரும். இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் யாவும் நீங்கப்பெறும். பாவங்கள் தொலையும். மேலும் காலை மாலை இரண்டு வேளையும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வது நம் இல்லத்தில் செல்வச் செழிப்பை அதிகரிக்கச் செய்யும்.
விரதம் இருக்க முடியாதவர்கள்...
புரட்டாசி சனிக்கிழமை தளிகை...
வழக்கமாக புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபாடு செய்பவர்கள் முதல் மற்றும் நான்காவது அல்லது கடைசி வாரத்தில் தான் தளிகை இடுவார்கள். ஆகையால் இல்லத்தில் நவராத்திரி கொலு வைத்திருப்பவர்கள் புரட்டாசி மாதத்தின் முதல் மற்றும் நான்காவது வாரத்தில் தளிகையிட்டு வழிபாடு செய்யலாம். மேலும் கொலு வைக்காதவர்கள் எந்த சனிக்கிழமையில் வாய்ப்பு கிடைக்கின்றதோ அந்த சனிக்கிழமையில் தளிகையிட்டு பெருமாளை வழிபாடு செய்யலாம். மற்ற சனிக்கிழமைகளில் மாவிளக்கு வழிபாடு செய்யலாம். ராமாயணம் அல்லது சுந்தர காண்ட பாராயணம் போன்றவற்றை பாராயணம் செய்து பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பகல் 12.30 முதல் 01.20 வரையிலான வேளையில் தளிகை இட்டு வழிபாடு செய்யலாம். பெருமாளுக்கு தளிகையிடும் போது வாழை இலையில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சுண்டல், பாயசம் முதலானவற்றில் உங்களால் எது முடிகின்றதோ அதை நிவேதனம் செய்து வழிபடுங்கள். ஒரு சிலர் பலவிதமான சாதங்களால் பெருமாளின் உருவத்தை அமைத்து தளிகை இடுவார்கள். இன்னும் சிலர் சாம்பார், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம், வடை என உணவு சமைத்து படையல் இட்டு வழிபாடுவார்கள். இவற்றில் யாருக்கு என்ன முறையோ அதை பின்பற்றி தளிகையிட்டு வழிபாடு செய்யலாம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதும், அருகில் உள்ள பெருமாள் ஆலயம், ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் ஹயக்ரீவர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களுக்கும் சென்று வழிபாடுவது சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காகம், பசு போன்ற பறவை மற்றும் விலங்குகளுக்கு உணவிடுவது மிகவும் விசேஷமானதாகும். மேலும் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் கோவிந்த நாமம் சொல்லி பெருமாளின் பரிபூரண அருளை பெறுங்கள்.
Comments
Post a Comment